Monday, October 30, 2017

தாய்க்கு நிகர் தாய்மொழி !



                       

" கரும்பு தந்த தீஞ்சாறே , கனி தந்த நறுஞ்சுளையே ,கவின் முல்லை 
அரும்பு தந்த வெண்ணகையே அணிதந்த  செந்தமிழே  அன்பே  "  என்கிறார் பாரதிதாசன் .  
         அப்பப்பா  என் தாய்மொழி தமிழில்  தான் எத்தனை இன்பம் , எத்தனை சுவை . உலகத்தின் மிகச்சிறந்த மொழியான தமிழ், என் தாய்க்கு நிகரான மொழி .    

               குழந்தை பிறந்தவுடன் அறியும் முதல் உறவு தாய் தான்.  தாய் சொல்லி தான் குழந்தை, உலகத்தை அறியும்.   ஒரு தாய், தன் தாய்மையை முழுமையாய் உணரும் தருணம் எது தெரியுமா?  தன் செல்வச் குழந்தை தன்னை  "அம்மா " என்று அழைக்கும் தருணமே.  இப்படி தாய்க்கும் சேய்க்கும்மான உணர்வோடும்  ,நம்  ஒவ்வொருவரின் வாழ்வோடும் கலந்திருப்பது தம் தாய்மொழி தான்! 

           குழந்தை முதலில் கேட்கும் இசையும கூட தாய் பாடும் தாலாட்டு தான்  . "தால்"என்றால்  நாக்கு , நாக்கை அசைத்து பாடுகின்ற பாடல் ஆதலால்  "தாலாட்டு"என்று  ஆனது. இன்று  New Born, Infant , Toddler  என்றெல்லாம் சொல்கிறோமே , இதை நம் முன்னோர்  பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே , காப்பு, செங்கீரை,தால் ,சப்பாணி ,முத்தம்,வருகை,அம்புலி,சிற்றில்,சிறுபறை ,சிறுதேர்   என்று குழந்தையின் வளர்ச்சி பருவங்களை  வகை படுத்தி உள்ளனர்.

                   ஏன் மொழிக்கு தாய்மொழி என்று பெயரிட்டான் ?  சற்றே சிந்திப்போம்.  வாழ்வில் மற்ற எல்லா உறவுகளும் மாறிவிடும், இன்றைய நண்பன், நாளையே  பகைவனாவான் . ஆனால் தாய் என்ற உயிர் மட்டுமே ,அதே தன்னலமற்ற அன்புடன் நம்மோடு இறுதி வரைக்கும்  வருவாள்.  தாய் மட்டும் தான் ஒரு குழந்தையை  செவ்வனே உருவாக்க முடியும். தாய்மொழி அவளால் அறியப்படுகிற மொழி மட்டும் அல்ல , அவளால் மட்டுமே அந்த  மொழியை பிழையின்றி தன் பிள்ளைக்கு கொண்டு சேர்க்க முடியும்.  ஆதலின் மொழியை ஒழுங்காய்  பிள்ளைக்கு கொண்டு சேர்க்கும் மிகபெரிய பொறுப்பும் தாயிடம் இருந்து தான் தொடங்குகிறது.  ஆனால் , இன்று தாய்மார்களே தங்கள் குழந்தைகள் தங்களை   "Mummy  "  என்று  அழைக்க சொல்வது தான் அவலம் .    குழந்தைக்கு   "anushka, hansika  "    என்று  புரியாத நடிகைகளின் பெயரை வைப்பதை காட்டிலும் நல்ல தமிழ் பெயர்களை சூட்டுங்கள் .  உங்கள் பிள்ளையோடு சேர்ந்து மொழியும் பல 100 ஆண்டு வாழும்.   மிகபெரிய அற நூல்கள் நம் மொழியில் தான் உண்டு.  பிள்ளைகளுக்கு நம் பரம்பரியதையும், மொழி பாடல்களையும் ,நீதி கதைகளையும் சொல்லி கொடுங்கள்.   என்ன தான் ஆங்கில புலமை பெற்றாலும், அது சொன்னதை சொல்லும் கிளிக்கே ஒப்பாகும். கிளியின் பேச்சுத்  திறமை பூனை வரும் வரை மட்டுமே ,பூனை யை  கண்டதும்   "கீச் கீச்   " என்று தான் அலறும் .  ஆதலால் நாம் , தமிழ் மொழி ஒதுக்கி பிறமொழி புலமை  பெறுவது அந்த கிளிக்கே  ஒப்பாகும். 

           தமிழ் என்பது வெறும் மொழியல்ல , நம் உணர்வோடு கலந்தது . தாய் கூட நாம் சாகும்வரை  நம்மோடு வருவதில்லை , ஆனால்  தாய் மொழி பிறப்பு முதல் இறப்பு வரை நம்மோடு வரும். மொழியின் வளர்ச்சி வீட்டில் இருந்து தான் தொடங்கும். ஆகவே பிள்ளைக்கு தமிழை சொல்லிகொடுங்கள் ,அவன் , நாளை பெற்றவர்களையும் , தாய்மொழியையும்   அனாதை இல்லங்களுக்கு அனுப்பமால் காப்பாற்றுவான் !  

        "தேன் ஒக்கும் செந்தமிழே  நீ தான் கனி ,நான் உந்தன் கிளி. என்ன வேண்டும் இனி  " ?. தினம்தோறும் தமிழ்த்தேனை சுவைப்போம்.  தமிழ் நம் அடையாளம் ,தமிழ் என் தாய் . தமிழ் என்  உயிர்க்கு நேர் ! 

பாப்பாவும் பொம்மையும் !

தாலாட்டு பாட தாய்க்கும் நேரமில்லை 
கைகோர்த்து விளையாட கூட்டாளி யாருமில்லை 
அண்ணனோ அக்காவோ யாரோடும் பிறக்கவில்லை 
விளையாட உன்னையன்றி என்னோடு ஒருவரில்லை 

அம்மா கொஞ்சம் நவீனமாகி வேலைக்கு சென்றுவிட்டாள் 
அப்பாவோ செல்வம் சேர்க்க தேசமெங்கும் சுற்றிவிட்டார் 
காக்கா  கதை சொல்ல தாத்தா பாட்டி இல்லை 
அபார்ட்மென்ட் வாழ்க்கையில் அக்கம் பக்கம் ஆட்களில்லை 

பரப்பரப்பான வாழ்வின் பரிசு இதுதான் கண்ணா 
கசப்பான உண்மை  இதை உணர்ந்துவிடு கண்ணா 
தனிமையை இப்போதே பழகிக்கோள் கண்ணா 
தாயின்றி போனாலும் காவலுக்கு நானிருக்கேன் 
கலங்காதே நீ கண்ணுறங்கு கண்ணா  !! 

கனத்த அடி வயிறு !

வெளியில் கிளம்பும் போதெல்லாம் ஒரு நெருடல்
நீண்ட நேர கோயில் வரிசைகளிலும் ,
நாள் முழுக்க செய்யும் ஷாப்பிங்கின் போதும்
அடி வயிறு கனக்கிறது
ஒவ்வொரு ஹோட்டலிலும் அதற்கான அறை இருக்கிறதா என்று தேடுகிறேன்
யாரிடம் கேட்பது என்ற கூச்சம்
வீட்டைபூட்டும் முன்பும் கூட ஒரு முறை போய் வந்தேனே
ச்சே தண்ணீர் குடித்திருக்க கூடாதோ?
இந்த மாதிரி எந்த பதட்டமும் இல்லாமல்
நாள் முழுக்க என்னோடு பயணிக்கிறார்கள்
என் கணவனும் , மகனும் !!

ரயில் பயணம்!




கடந்தது செல்லும் மரங்கள் ,
அவ்வப்போது கீரிச்சிடும் சப்தம் ,
எதிரே இருப்பவர் நாளிதழ் கடந்தருவார் ,
கூவி விற்கும் பண்டங்கள் சொல்லிவிடும் அடுத்துவரும் நிலையத்தை,
மனதை மயக்கிவிடும் பக்கத்தில் இருக்கும் பாப்பாவின் சிரிப்பு ,
இலவசமாய் காதில் விழும் அடுத்தவர் குடும்பக்கதை ,
அப்துல் , அர்ஜுன் இருவரின் செருப்பும் இருக்கையின் அடியில் ஒன்றாய்சேர்ந்துகிடக்கும் ,
வேற்று மொழிக்காரரிடம் அவர் மொழியில் ஓரிரு வார்த்தை பேசிவிட்ட பெருமை பூக்கும்,
பெரிய தொட்டிலில் அத்தனை குழந்தைகளையும் தாலாட்டும் தோரணை,
ரயில் பயணம் வெகு சுகம் தான்
மறுநாள் காலையில் அவசரமாய் பெட்டியின் கழிப்பறைக்கு செல்லும்வரை !!


ஆடை !!




நவநாகரீக உடை அணிந்தாள் 
அவள் ஒழுக்கம் விமர்சிக்கப்பட்டது.
லெக்கிங்க் உடுத்தினாள் அதை 
ஆபாசம் என்று பத்திரிக்கை படமெடுத்தது.
சுடிதாரின் மேல்துண்டு சரியும் போதெல்லாம் 
ஒரு ஜோடி கண்களேனும் அதை ஊடுருவி பார்த்து விடுகின்றன.
இரவு உடையில் வாசல் வரை வந்துவிட்டாள்
அது இரவிற்க்கானது மட்டுமே என்ற இலக்கணம் போதிக்கப்பட்டது.
அடக்கமாய் சேலை அணிந்தாள்
பேருந்தில் ஒரு கை லாவகமாய் அவள் இடையை தடவியது
கோபமாய் பேருந்திலிருந்து இறங்கினாள் .
சாலையோரம்,
முழுபோதையில் கிட்டத்தட்ட நிர்வாணமாக குடிமகனும்,
நிர்வாண நாயொன்றும் கிடந்தன .
அவர்களை துளியும் சட்டை செய்யாமல்
பெண்கள், வெகு இயல்பாகவே அவர்களை கடந்து சென்றார்கள் !!