Sunday, March 14, 2010

அம்புலி என்னும் அழகி !!



               தமிழர் வாழ்வோடு இயைந்தது இயற்கை. முதலில் தோன்றிய மனித குலம் இயற்கைகை கடவுளாக வழிபட தொடங்கியது. தமிழன் வழிபாட்டுடன் நின்று விடாமல் தனது கற்பனையை சேர்த்து இலக்கியங்கள் படைக்க தொடங்கினான். இலக்கியங்கள் வெறும் கற்பனை கதைகளாக இல்லாமல், அதன் மூலம் வாழ்வியல் நெறிகளையும்,தனது வாழ்க்கை முறைகளையும் பதிவு செய்தான். இயற்கையை தமிழர்களை காட்டிலும் வேறு யாரும் இத்துணை அழகாக பதிவு செய்திருக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.

                 இயற்க்கை வருணனைகளில் முதலிடம் வகிப்பது நிலா. நிலவின் அழகை இலக்கியத்தில் இப்படி கையாண்டு இருக்கிறார்கள் என்ற சிந்தனையின் விளைவே இந்த கட்டுரை.
 
               நிலவை இறைவனாக பாவித்த இந்து மதத்தினர் நவகிரகங்களுக்குள் ஒன்றென சேர்த்தார்கள். நிலவின் ஒளி - கருணை,காதல்,அமைதி, கற்பனை ஆகியவற்றின் சின்னமாக கருதப்பட்டது. எனவே தான் கருணை ததும்பும் இறைவனின் திருமுகத்தை நிலவிற்கு ஒப்பிட்டார்கள்.சிவபெருமான் திங்களை தன்முடி மீது சொடிகொண்டிருபதை ஞானசம்மந்தர்,

      " தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்

        காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன் "

       (முதல் திருமுறை )

என்கிறார்.

             சக்தியின் நுதல் பிறை மதி போன்று உள்ளதை " மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து " என்று திருநீற்று பதிகத்தில் அப்பர் பெருமான் பாடுகிறார். பாவை நோன்பு நோற்கும் ஆண்டாள் மதி நிறைந்த நன்னாளில் திருமாலை வழிபட தன தோழிகளை அழைக்கிறாள்.

          நிலவின் ஒளியை மையமாக வைத்து உருவாக்க பட்ட ஒரு பக்தி இலக்கியம் அபிராமி அந்தாதி; திருக்கடையூர் அபிராமியின் முக ஒளியில் தன் நினைவிழந்த பட்டர் அம்மாவாசை நாளை பௌர்ணமி என்று அரசனிடம் சொல்ல , அன்று இரவு நிலவு தென்பட வில்லையெனில் பட்டருக்கு மரண தண்டனை என்று அறிவிதித்தான். அபிராமியின் அருள் பெற்ற பட்டர் அந்தாதி பாட, அபிராமி தனது காது குண்டலங்களை எரிந்து நிலவினை தோன்ற செய்தாள்.

          "அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அரு மறைகள்

            பழகிச் சிவந்த பதாம்புயத்தாள், பனி மா மதியின்

            குழவித் திருமுடிக் கோமளயாமளைக் கொம்பு இருக்க--

            இழவுற்று நின்ற நெஞ்சே.-இரங்கேல், உனக்கு என் குறையே?"

           மதி , சந்திரன் , அம்புலி ,திங்கள் என்று பலவாராக அழைக்கப்படும் நிலவு கவிஞர்களின் சுரங்கம் என்றே சொல்ல வேண்டும். சிலப்பதிகாரத்தில் " திங்களை போற்றுதும் " என்று மங்கள வாழ்த்து காதையில் பாடுகிறார்.

பாரதியார் காணி நிலம் வேண்டுகையில் ,

பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம் பக்கத்திலே வேணும் - நல்ல

முத்துச் சுடர்போலே - நிலாவொளி

முன்பு வரவேணும், அங்கு

கத்துங் குயிலோசை - சற்றே வந்து

காதிற் படவேணும், - என்றன்

சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்

தென்றல் வரவேணும்.

என்று நிலவினை அழைக்கிறார்.

        அழகின் வருணனைக்காக மட்டும் அல்லாது, நிலவில் மனிதன் கால் பதிப்பான் என்பதை " கன்னியராகி நிலவினில் ஆடி களித்ததும் இந்நாடே" என்று அன்றே கனவு கண்ட ார். திருமகளை பாடுகையில்
" நிலவு செய்யும் முகமும் " என திருமகளின் முகத்தை நிலவிற்கு ஒப்பிடுகிறார்.

நிலவினை நட்புக்கு உவமையக்கிய வள்ளுவர்
" நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதி

பின்னீர பேதையர் நட்பு"

நல்லவர் நட்பு வளர்பிறை போல வளர்ந்து வரும் என்றும் , தீயவர் நட்பு தேய்பிறை போல தேய்ந்து விடும் என்று பாடுகிறார்.

பாரதிதாசன் நிலவை காதலியின் முகமாக பாவித்து ,

" நீல வான் ஆடைக்குள் உடல் மறைத்து

நிலவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை ,

கோலமுழுதும் காட்டிவிட்டால் காதற் கொள்ளைஇலே

இவ்வுலகம் சாமோ ? "

இப்பாடலில் நிலா தன் உடலை மேகம் என்னும் திரைக்குள் மறைத்து கொண்டு தன் முகத்தை மட்டும் காட்டுகிறது . அது தன் உடல் முழுவதையும் காட்டிவிட்டால் அந்த அழகிலே இந்த உலகமே மயங்கி போகும் என்கிறார்.

மேலும் தன் அழகின் சிரிப்பில்,


" பொன்னுடை களைந்து, வேறே புதிதான முத்து சேலை

தன்இடை அணிந்தால் அந்த தங்ககடற் பெண்ணாள், தம்பி

என்னென்று கேள்; அதோபார் எழில் நிலா ஒளிகொட்டிற்று

மன்னியே வாழி என்று கடலினை வாழ்த்தாய் தம்பி!!

ஞாயிறு மறைந்து நிலா தோன்றும் அழகை, இந்த பாடல் எத்துனை அழகாக சொல்கிறது !!
              சங்க கால கவிஞன் ஒருவன் நிலவினை வெள்ளை அப்பம் என்றும் , நீல வானத்தில் நீந்துகின்ற ஓடம் என்றும் பாடிஇருக்கிறார். காதலனை பிரிந்த தலைவி நிலவை தூது விடுவாள். நிலவு தேய்வதை போல் தானும் தலைவனை நினைத்து மெலிவதாக சங்ககால பாடல்கள் சுட்டுகிறது.
மீனாட்சி சுந்தரனார் தமிழ் தாயின் நெற்றியை " தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே" நிலவிற்கு ஒப்பிடுகிறார்.

              இப்படி நிலவு தமிழரின் இலக்கியத்தில் மட்டும் அல்லது அன்றாட வாழ்க்கையிலும் ஒரு அங்கமாக இருக்கிறது . தாய் தன் குழந்தைக்கு நிலவினை காண்பித்து சோறூட்டும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகின்றது. பிள்ளை தமிழ் இலக்கியத்தில் குழந்தையின் வளர்ச்சி பருவத்தில் ஒன்றாக "அம்புலி பருவம் " கருதபடுகிறது அரண்மனைகளில் நிலா முற்றம் வைத்து கட்டுவதும் அங்கே தலைவி தலைவனுடன் தனிமையில் பழகுவதையும் இலக்கியங்கள் காட்டுகின்றது.

           தினசரி தேடல்களில் தன்னை தொலைத்து விட்டு ஓடி கொண்டிருக்கும் மனிதன், கொஞ்சம் இயற்கையை நுகரவும் ,இலக்கியத்தில் உள்ள சுரங்கத்தை உணரவும் வேண்டும் .ஒரு முறையேனும் இரவில் வானத்தை பார்த்து கொஞ்சம் ரசிக்கவும் கற்று கொள்ளலாமே !!

No comments: