Monday, March 5, 2018

தாய்மொழியை மெச்சிடுவீர் !


பல்லாயிரம் ஆண்டுகள் கடந்த அகரம் நீ !
ஆரியம் அசைக்க  முயன்றும்  அசையா சிகரம் நீ !
ழகரம் என்பது  எம் மொழியின் சிறப்பு 
திராவிட மொழிகள் அனைத்தும் இவளின் வளர்ப்பு ! 

'பூ' என்றால் உதடுகள் அழகாய் பூத்திடும் 
'முத்தம்' என்றதும் இதழ்கள் ஒன்றாய் குவிந்திடும் 
சொற்களின் ஓசையிலேயே அதன் காரணம் -இவளின் 
சொல்வளம் அதை நாம் சொல்லிமுடிப்பது எங்ஙனம் ! 

ஒற்றை எழுத்துக்கள் கூட பொருள் தரும்
ஒரு சொல்லே பல அர்த்தங்களையும்  அள்ளித்தரும்
எம் மொழியின் நயமதை என்ன சொல்லும் மனம்
தமிழை அமிழ்தினும் மேல் என்றாலும் மிக்க தகும் !

ஒழுக்கம், வீரம், ஈகை - வாழ்க்கைக்கு காட்டிய வழி
களவிற்கும் கற்பிற்கும் கூட இலக்கணம் சொன்ன மொழி
வாழ்வில் இடறுகையில் மனதில் ஒலித்திடும் ஓர் குரல்
அது அய்யன்  வள்ளுவன் அள்ளித்தந்த திருக்குறள் !

அறிவியல் , இணையம் என இவள்  வளர்ந்தென்ன நிதம்
வேர் கொண்ட மரத்தில்  புது கிளைகள்முளைப்பதா கடினம் ?
துறைதோறும் தமிழின் புகழ் பரவும் என்பது நிச்சயம் 
ஹார்வர்ட் அரியணையிலும்  இவள் அமரப்போவது  சத்தியம்!

தாயைக் காத்தல் மானுடர்க்கு  கடனாம்
மொழியைப் போற்றுதல் நம் உயிர்க்கு நிகராம் 
நாமே  நம்மொழியை  புறக்கணித்தல் பிழையாகும் - அது
விளக்கின் அடியில் குவியும் இருளுக்கு ஒப்பாகும் !

அடுத்த தலைமுறைக்கு மொழியைக்  கொண்டு சேர்ப்போம்
ஹார்வர்ட் இருக்கைக்கு நிதியை  அள்ளிக் கொடுப்போம்
திக்கெட்டும் ஓங்கட்டும்   எம் மொழியின் மாட்சி
அறநெறி வழுவாது மானுடத்தை காத்திடும் இவள் ஆட்சி !!